".................... ஆகிய நீங்கள், ...................... ஆகிய குணவதியை, திருமணம் செய்துகொள்ள, உங்களுக்கு சம்மதமா?" மனம் இல்லை என்று சொல்கிறது ஆனால் வாய் மூடியே இருக்கிறது. சட்டேன்று உடலை விட்டு மனம் வெளி செல்ல முயல்கிறது. காதுகள் கருப்பானாலும் சிவக்கின்றன. பொய்சொல்வது , அவ்வளவு கடினமில்லை. ஆனால் , அதை நினைவில் வைத்துக்கொண்டு, பின் ஒருமுறை , அல்லது பல முறை முன் சொன்னது பொய் அல்ல என்பதற்காய் பல நூறு முறை பொய் சொல்ல வேண்டியதாகிவிடுமே?
உண்மைக்கு பலமே கிடையாது. ஏனென்றால் , எல்லா உண்மையும் ஒரே பொய்யினால் பொய்யாகக்கூடுமே. எல்லா பிரச்சனைகளுக்கும் முடிவுகள் சாஸ்வதமாக அமைவதில்லை. ஆனால் எல்லா முடிவுகளும் யாரவது ஒருவருக்கு பிரச்சனையாகதான் முடிகிறது. சமரச முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைவதில்லை. ஏனென்றால் தோல்வி என்பதே ஒரு சமரசம் தான். ஒருவேளை நான் தோற்றுவிட்டேனோ? ஆம் என்று நினைத்தால் நான் சமரசவாதி, இல்லை என்று நினைத்தால் நான் தீவிரவாதி. தீவிரம் காட்ட வீரம் வேண்டுமா? விவேகம் வேண்டுமா? .............................ஆகிய நீங்கள் .......... ஆகிய குணவதியை திருமணம் செய்துகொள்ள உங்களுக்கு சம்மதமா?
நன்றாக வளர்ந்து நின்றுகொண்டிருக்கும், ஒரு அரச மரத்தில் நிறைய காகங்கள் கூடுகட்டி வாழ்கின்றன. அரசமரங்கள் அதிகமாக காணப்படுவதில்லை . நான் என்னுடைய வயதிற்கு (இருபத்தி ஒன்பது ) ஒருமுறை கூட அது பூத்து பார்த்தது கிடையாது. பின் எப்படி மகரந்தம் பரவும்? அரசமரத்தில் கனிகளை யாராவது பார்த்திருக்கிறீர்களா? பின் எப்படி விதை உருவாகும்? எனது நண்பர் செல்லபாண்டியன் சொல்கிறார், அரசமரம் , தான் விரும்பிய இடத்தில தானாய் வளரும் என்று. இது உண்மையா? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இயற்கையின் தன்னிரைவட்டதுள் அடங்காததாகவே அரசமரம் வாழ்கிறது. ஒருவேளை அது அப்படி இருப்பதால் தான் அதற்க்கு மதிப்பு அதிகமாக இருக்கிறதோ ?
பூக்கள் மலர்கின்றது, தன்னுள் அது தேன் கொண்டிருக்கிறது. தேன் ஒரு கையூட்டு , மகரந்த பொதி சுமக்க. கையூட்டு பலன் தருவது காலத்தின் கைகளில். விதைக்கும் கணிக்கும் வித்தான தேன் தான் இளமை. இவையாவும் இயற்க்கை. இது யாருடைய முடிவாலும் நடப்பதில்லை. ............................. ஆகிய நீங்கள் .............. ஆகிய குணவதியை திருமணம் செய்துகொள்ள உங்களுக்கு சம்மதமா?
பாதிரியார் ஒருமுறை கேட்ட குரல் பலமுறை செவிப்பறையை சுற்றுகிறது. பஸ்ஸில் செல்லவேண்டுமெனில் ஓட்டுனரை நம்பவேண்டும். இரயிலில் இது சற்று மாறுகிறது. ஓட்டுனர் நம் கண்ணில் படுவதில்லை. ஆனால் நம்ப வேண்டும். விமானத்தைஎல்லாம் இப்போது கம்ப்யூட்டர் தான் ஒட்டுகின்றதாம். இங்கே யாரை நம்புவது?
முதலில் நான் கால்பந்தாட்ட வீரனாக நினைத்தேன்.பீ டி மாஸ்டர் சொன்னவுடன் வேகமாக பந்தை காலால் ஏத்தினேன். என்னை சிலருடன் சேர்ந்து நிற்க சொன்னார். பின்னர் எங்கள் அனைவரையும் தகுதியற்றவர் என்று வெளியேற்றிவிட்டார். நான் உடனே ஹாக்கிக்கு மாறினேன். ரைட் அவுட் பொசிசனில் விளையாடினேன். முதல் மேட்ச் விளையாட போகும் பொது ஹாக்கி மாஸ்டர் என்னை புறம்தள்ளி வேறு ஒருவனை ஆடவைத்தார். " மனம் தானாய் ஹாக்கி வேண்டாம் என்று சொல்ல, கூடை பந்து விளையாட சென்றேன். பனிரெண்டாம் வகுப்பு வந்துவிட்டதால் மனம் படிக்கலாமே என்று அலாரம் அடித்தது. நடுவில் கொஞ்ச நாள் இசை கருவிகளை வாசிக்க கற்றுக்கொண்டேன். இப்போது எல்லாம் மறந்து போய்விட்டது. இவை எல்லாம் வாழ்கையில் என்முன் வந்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவர நான் செய்துகொண்ட சமரசத்தில் விளைவுகளே. பாதிரியார் மீண்டும் ஒருமுறை கேட்டார் , ஆனால் வித்தியாசமாக "...................... ஆகிய நீங்கள் ...................... ஆகிய குணவானை திருமணம் செய்துகொள்ள உங்களுக்கு சம்மதமா?" நான் பதில் சொன்னதாக பாதிரியார் நினைத்து விட்டாரோ? அதனால் அருகில் நிற்கும் மணப்பெண்ணை கேட்கிறாரோ? இப்போதும் மனது மாத்திரம் தான் இல்லை என்கிறது. வாய் மூடியே இருக்கிறது.
சடங்குகள் எல்லையை கடந்துவிட்டது. இருந்த ஒரே ஒரு வாய்ப்பும் போய் விட்டது. இனி இவள் தான் , இன்பம், துன்பம், கஷ்ட்டம், நஷ்ட்டம் என்று நான் நினைத்துகொள்ளும் எல்லாவற்றிலும் கூடவரும் வழிபயணி.
கேள்விகள் முடியவில்லையோ? பாதிரியார் சர்ச் இல் கூடி இருந்த அனைவரையும் பார்த்து, "இங்கு கூடி இருக்கும் உங்களில் யாரவது, இந்த திருமணத்தில் இவர்கள் இருவரும் இணைய கூடாத நியாயமான காரணம் எதுவாகிலும் உண்டென்றால் இப்போது கூறலாம் "என்றார். ஜன்னல் வழியே தெரியும் அரசமரம் சொல்வது எனக்கு மட்டுமே கேட்டது. பாதிரியார் " இனி ஒருவனும் ஒருக்காலும் ஒன்றும் சொல்லாதிருக்க கடவன் " என்றார். நான் எனது மனதை பார்த்தேன்.
மனது அரசமரத்தில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தது. அநேகமாக அது திரும்பிவராது. ஏன் என்றால் மனதால் பேசாமல் இருக்க முடியாதல்லவா?
No comments:
Post a Comment