Wednesday, August 5, 2009

முதல் பயணம் ...

எந்த ஒரு ஆரம்பமும் மிகவும் அற்பமானது தான், ஏனென்றால் இதுவே தொடக்கம் என்பதை அறியும் ஆற்றல் நம்மிடம் இல்லை.
இப்படித்தான் நானும் ஒருநாள் எனது பயணத்தை தொடங்கினேன். அது தஞ்சை இரயில் நிலையம். எனது தாயும் மற்றும் சில ,முக்கியமானவர்களும் வழியனுப்ப, ஒரு சுபயோக தினத்தில் பெங்களூரை நோக்கி எனது முதல் பயணம் தொடங்கியது. மிகபெரிய மாற்றத்தை எதிர்பார்த்து தொடங்கிய அந்த பயணத்தில், ஜன்னல் வழி காட்சிகளின் மாற்றத்தை ரசித்துக்கொண்டு, இந்த பயணத்தினால் நான் சாதிக்கபோகும் விஷயங்களை குறித்த கனவுகளையும், நான் பயணிக்க காரணமானவர்களை குறித்த நினைவுகளையும், அசைபோட்டுகொண்டிருந்தேன்.

ஒரு பயணத்தால் என்னவெல்லாம் மாறிவிடும்? நேரமும் இடமும் மட்டுமே என்று இப்போது புரிகிறது. ஆனால் அன்று அந்த பயணம் என் வாழ்கையையே மாற்றிவிடும் என்று நம்பினேன். chemical இன்ஜினியரிங் ஒரு தேவாம்சமான படிப்பல்லவா? வா, வா, காத்திருக்கிறது வேலை என்று எல்லோரும் கூபிடுகிறார்கள் அல்லவா, "நமக்கு இந்த சென்னை வெண்ணை எல்லாம் சரிப்பட்டுவராது நேரா பெங்களூர் தான்" என்ற நினைபோடு, கட்டு பெட்டியை என்று கெளம்பிவிட்டேன்

பெங்களூரில் எனக்கு ஒரு மாமா உண்டு. வேலை கிடைக்கும் வரை அவர் வீட்டில் ஜாகை என்பதே ஐடியா. போதாகுறைக்கு உனக்கு வேலை வாங்கிகொடுப்பதே என் தலையாய வேலை என்ற மாமாவின் வார்த்தை வேறு. அடேய் உனக்கு கிடைத்த வாய்ப்பு, கிடைக்காது எந்த நாய்க்கும் என்ற " தன்னம்பிக்கையோடு " இருக்கையில் அமர்திருந்தேன்.

இந்திய இரயில்களின் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி குறித்து அறிந்தவர்கள் மேலே படிக்கவும்.....
எனது படுக்கை மிடில் பெர்த், எனக்கு எதிரில் இருந்தவன் இரயில் கிளம்பியவுடன், பையை திறந்து ஏற் பில்லாவை எடுத்து ஊத தொடங்கினான். நானோ ஜன்னல் உலகத்தில் முழ்கி இருந்தேன், பூதலூர் இரயில் நிலையம் தாண்டிய உடன், "சார், உங்க பெர்த் நம்பர் என்ன என்றான் அருகில் இருந்தவன். நான் சொன்னதும் அவனிடம் பதிலேதும் இல்லை ( உண்மையில் கேள்வி எதுவும் இல்லை )
ஜன்னல் காட்சிகள் மங்க தொடங்கியது. இயற்கையின் எல்லா நிறங்களும் இருட்டில் தள்ளப்பட்டதால் வெளியில் பார்க்க எதுவும் இல்லை. எனது இருக்கை அருகில் நான்கே பேர். ஒருவன் ஏற் பில்லொவ் காரன், இன்னொருவன் பெர்த் நம்பர் களை சரிபார்தவன். மேலும் இருவர் வயதில் மூத்தவர். பழக்கதோஷத்தால் நான் அமர்திருந்தது ஜன்னல் இருக்கையில். எனக்கு எதிரில் இருந்த ஏற் பில்லொவ் காரன் கால் நீட்டி படுக்க, எனக்கு அருகில் இருந்தவன் மீண்டும் ஒரு முறை பெர்த் நம்பர் கேட்டான்.


எனக்கு இந்த முறை புரிந்துவிட்டது, மிடில் பெர்த் காரனுக்கு மிடில் seat தானே, ஜன்னல் இனிமேல் நமக்கு தேவை இல்லை, சரி toilet வரை சென்று வரலாம் என்று நினைத்து எழுந்தேன். திரும்பி வந்து பார்த்தால், பெர்த் நம்பர் கேட்டவனும் நீட்டி படுத்திருந்தான். ச்சே இரண்டு நிமிட தாமதத்தால் இருக்கையை இழந்துவிட்டேனே என்று வருத்தப்பட்டேன். திருச்சி நெருங்கிகொண்டிருந்தது, நானோ பக்கத்தில் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தேன். இன்னொருவருடைய இருக்கை என்பதால் சிலநிமிடத்தில் எழுந்துவிட்டேன். இரயிலை சுற்றி பார்க்கலாம் என்று கெளம்பினேன்.

இரயில் பெட்டிகள் இணைந்திருந்தது அடுத்தடுத்த பெட்டிகளுக்கு செல்ல வழியும் இருந்தது. இதன் முடிவு வரை செல்லலாம் என்று நடக்க ஆரம்பித்தேன். திருவரும்பூர் தாண்டியது, திருச்சியும் வந்தது. பெட்டிபெட்டியாக நான் நடந்துகொண்டே இருந்தேன், வழியில் என்னை பார்த்தவர்கள் எல்லாம், தங்கள் வீட்டில் நுழைந்த நாயை போல என்னை பார்த்தார்கள். அருகில் இருந்த ஒருவனிடம் "இது எந்த கோச்?" என்று கேட்டேன். "எஸ் எட்டு" என்றான் அவன்.

இரயில் திருச்யில் நின்றது. எஸ் எட்டை விட்டு இறங்கிய நான், என்னுடைய கோச் ஆன எஸ் இரண்டை நோக்கி நடை மேடையில் நடக்க தொடங்கினேன். வெளியில் இருந்து பார்த்தேன் என்னுடைய இருக்கைக்கு அருகில் மேலும் மூன்று பேர் இருந்தனர். இந்த முறை மீண்டும் இருக்கையை இழக்கக்கூடாது என்ற முடிவோடு பெட்டிக்குள் நுழைந்தேன். போன வேகத்தில் எனது இருக்கையில் உட்கார்ந்தேன், அப்பாடா நிம்மதி ..உட்கந்தச்சு, அடுத்தது என்னுடைய bag , என்னுடைய bag? என்னுடைய bag காணவில்லை.....

No comments:

Post a Comment